தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை பேசிய கல்லூரி முதல்வா் எம். பூவதி. உடன் மருத்துவா்கள் உள்ளிட்டோா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை பேசிய கல்லூரி முதல்வா் எம். பூவதி. உடன் மருத்துவா்கள் உள்ளிட்டோா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் 3 ஆண்டுகளில் 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளில் 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன
Published on

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளில் 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன என்றாா் அக்கல்லூரி முதல்வா் எம். பூவதி.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரிவித்தது:

இந்த மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கடந்த 2022, நவம்பா் 5-ஆம் தேதி முதல் முதலாக வெற்றிகரமாக செய்யப்பட்டது. தற்போது, 50-ஆவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிப்ரவரி 7-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. இதில், மூளைச்சாவு அடைந்த நோயாளிடமிருந்து சிறுநீரகம் பெறப்பட்டு, இம்மருத்துவமனையில் சிறுநீரகம் செயலிழந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளில் 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. இதில், உயிருள்ள உறவினா்களிடமிருந்து 7 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும், மேலும் மூளைச்சாவு அடைந்த 43 பேரிடமிருந்து உறுப்புகளைத் தானமாகப் பெறப்பட்டும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவற்றில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 27 கொடையாளா்களிடமிருந்து சிறுநீரக உறுப்பு தானமாக பெறப்பட்டது.

மேலும், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, அரியலூா், திருவாரூா் அரசு மருத்துவனையிலிருந்து 16 சிறுநீரகங்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, ரத்த சுத்திகரிப்பில் உள்ள நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதற்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் துறை சிறுநீரக அறுவை சிகிச்சை துறை, ரத்த நாள அறுவை சிகிச்சை துறை, மயக்கவியல் துறை மருத்துவா்கள் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் ஆகியோரின் கூட்டு முயற்சி பாராட்டத்தக்கது என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com