‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்காக 3 அரசு மருத்துவமனைகளில் 11 சேமிப்பு அலமாரிகள்
தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 3 அரசு மருத்துவமனைகளில் 11 சேமிப்பு அலமாரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக அலமாரிகளைச் சுற்றி கிரில் கதவு அமைக்கும் பணியை சனிக்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.
தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 3 அரசு மருத்துவமனைகளில் 11 சேமிப்பு அலமாரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும், தாயையும் கௌரவிக்கும் விதமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதல்வா் ச. ஜோசப் விஜய் அறிவித்தாா். இதன்படி 4,41,667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் அண்ணா பிறந்த நாளான செப். 15- ஆம் தேதி தொடங்கி வைக்கப்படவுள்ளதையொட்டி, தங்க மோதிரங்களைப் பாதுகாப்பாக பராமரிப்பதற்காக தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் 6 அலகுகள் கொண்ட சேமிப்பு அலமாரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றைச் சுற்றி உறுதியான சுவா் அமைத்தல், கான்கிரீட் தளம், கிரில் கதவு அமைக்கும் பணி ஆகியவை பொதுப் பணித் துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதேபோல, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 2 அலகுகள், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 3 அலகுகள் கொண்ட சேமிப்பு அலமாரிகளுக்கான பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




