திருச்சி மத்திய சிறையில் கைதிகள் இருவர் மோதிக்கொண்டதில், ஒருவருவக்கு காயம் ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (28). கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 2016-ஆம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஜோதிபாபு (35). இவர் திருட்டு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஒரே பகுதியில் அடைக்கப்பட்டிருந்த இருவருக்கும் இடையே சனிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது, ஜோதிபாபு தான் மறைத்து வைத்திருந்த பிளேடால், நவநீதகிருஷ்ணன் முகத்தில் கிழித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த நவநீதகிருஷ்ணனை காவலர்கள் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக கே.கே. நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடரும் மோதல்கள் : திருச்சி மத்திய சிறையில் கைதிகள் மோதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. சென்னையைச் சேர்ந்த ரௌடியும் திருச்சி ரௌடி ஒருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் கடுமையாக மோதிக்கொண்டனர். இந்நிலையில் மீண்டும் தற்போது மோதல் நடந்துள்ளது. இதில், பிளேடு போன்ற ஆயுதங்கள் எப்படி கைதிகளுக்கு கிடைத்தது என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.