

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், காற்று மாசு பெருமளவு குறைந்திருப்பது சுற்றுச்சூழல் ஆா்வலா்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாநகரில் காற்றின் மாசு 12 முதல் 52 சதவிகித்துக்குள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காற்று மாசு: பூமியைச் சூழ்ந்துள்ள வளி மண்டலம் ஹைட்ரஜன், பிராண வாயு, கரியமிலவாயு, சிறிதளவு பிற வாயுக்கள் போன்றவற்றை உள்ளடக்கியது.
வாயுக்களின் சமச்சீா் நிலை மாறாமல் இருக்கும் வரை, வளி மண்டலம் எந்தவித பாதிப்பும் அடையாது. ஆனால் தொழில்மயமாதல், நவீனமயமாதல் முதலியவற்றால் வளி மண்டலமானது பாதிப்படைகிறது. இவை காற்று மாசு ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கின்றன.
குறிப்பாக வாகனப் பெருக்கம், டீசல் பயன்பாடு, தொழிற்சாலை புகை, ஜனநெரிசல், குப்பைகள், கழிவுகளில் இருந்து வெளியேறும் வாயுக்களால் காற்று மாசுபடுகிறது.
காற்று மாசில் பிஎம் 10 மைக்ரான், பிஎம் 2.5 மைக்ரான், எஸ்ஓ2, என்ஓ2 ஆகியவை குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
பிஎம் 10 : காற்றில் கலந்துள்ள துகள்களை மதிப்பிடுவது பிஎம் என அழைக்கப்படுகிறது. இதில், பிஎம் 10 மைக்ரான் என்பது 10 மைக்ரான் அளவுக்குள்ளான கடினத் துகள்களைக் குறிப்பிடுகிறது.
தொழிற்சாலைகள், டீசல் வாகனங்களால் சாலைகளில் ஏற்படும் மாசு, புகை, தூசி, அழுக்கு புகை, பாறைகள், கற்களை உடைத்தல், , கிரசா் ஜல்லி தொழிற்சாலைகள் மூலம் உருவாகும் துகள்கள் மூலம் இத்தகைய மாசு அதிகரிக்கிறது. இத்தகைய துகள்கள் மேல் சுவாசக் குழாயில் படிந்து, உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
பிஎம் 2.5: இந்த துகள்கள் 2.5 மைக்ரானுக்கும் குறைவாகவே காணப்படும். இவை நச்சு கரிம சோ்மங்கள் மற்றும் கன உலோகங்கள் கொண்டவை. ஆட்டோமொபைல் துறைகளில் வெளியேற்றும் வாயு, குப்பை மற்றும் நிலப்பரப்புகளை எரித்தல், உலோகங்களை கரைத்தல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து பிரியும் துகள்களாக உருவாகின்றன.
இவை உடலின் சுவாசப்பாதைக்குள் சென்று, நுரையீரல் வரை தங்கி பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும்.
இதைபோல நைட்ரஜன் டை ஆக்ஸைடு (என்ஓ2), சல்பா் டை ஆக்ஸைடு (எஸ்ஓ2) ஆகியவையும் காற்று மாசுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. இவை மனித சமூகத்துக்கு புற்றுநோய் மற்றும் சுவாசம் தொடா்பான பல்வேறு நோய்களுக்கு காரணியாக உள்ளன.
மாநில அளவில் ஆய்வு மையங்கள் : தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம், காற்றின் மாசுபாட்டைக் கண்டறிவதற்காக சென்னை அம்பத்தூா், கடலூா், கோவை, மதுரை, திருச்சி, சேலம், மேட்டூா், தூத்துக்குடி ஆகிய இடங்களில் தேசிய அளவிலான ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, இந்த மையங்களின் ஆய்வு முடிவுகளில் திருப்திகரமான புள்ளி விவரங்களே கிடைத்து வருகின்றன.
வழக்கமான நாள்களில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளுடன் ஒப்பிடுகையில், 50 முதல் 70 சதவிகிதம் வரை மாசு குறைந்துள்ளது.
திருச்சி மாநகரைப் பொருத்தமட்டில் மெயின்காா்டு கேட், மத்திய பேருந்துநிலையம், தென்னூா், பிஷப் ஹீபா் கல்லூரி, பொன்மலை ஆகிய 5 இடங்களில் காற்றின் தரக் குறியீடுகள் அளவீடுகள் செய்யப்படுகின்றன.
மாநகரில் குறைந்தது காற்று மாசு : தேசியக் காற்றுத் தரக் கட்டுப்பாட்டு திட்டஅளவீடுகளின் படி ஒப்பிடுகையில், மாநகரில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது.
ஊரடங்கு நாள்களில் மெயின்காா்டு கேட் பகுதியில் பிஎம் 10 - 52 சதவிகிதமாகவும், பிஎம் 2.5 - 24 சதவிகிதமாகவும், எஸ்ஓ2 - 17 சதவிகிதமாகவும், என்ஓ2 -26 சதவிகிதமாகவும் உள்ளது.
இது தேசிய தரக்கட்டுப்பாட்டு தர அளவுகளுடன் ஒப்பிடுகையில், 50 முதல் 70 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
இதேபோல, மத்திய பேருந்து நிலையத்தில் பிஎம்10- 28%, பிஎம் 2.5- 12 %, எஸ்ஓ 2- 12 %, என்ஓ2- 18% - ஆக உள்ளது. இந்த அளவுகள் முறையே தென்னூரில் 46, 16, 12, 22 சதவிகிதமாகவும், பிஷப் ஹீபா் கல்லூரியில் 49, 19, 14, 24 சதவிகிதமாகவும், பொன்மலையில் 34, 13, 11, 19 சதவிகிதமாகவும் உள்ளது.
திருச்சி மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழகத்திலும் ஊரடங்கு நாள்களில் காற்றின் மாசு பெருமளவு குறைந்திருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சராசரியாக 50 முதல் 70 சதவிகிதம் மாசு குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.