தொழில்நுட்பக் கோளாறால் தடுமாறும் ரேஷன் கடைகள்

தொழில்நுட்பக் கோளாறால் திருச்சியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்க முடியாத நிலை எழுந்துள்ளது.
Updated on
1 min read

தொழில்நுட்பக் கோளாறால் திருச்சியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்க முடியாத நிலை எழுந்துள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தின்போது தமிழகம் முழுவதும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்ட நிலையில், திருச்சியில் கடந்த சில நாள்களாக தொழில்நுட்பக் கோளாறால் ரேஷன் பொருள் வழங்குவது தாமதமாகிறது.

திருவெறும்பூரில் இந்தப் பிரச்னையால் திங்கள்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமையும் 2 அட்டைதாரா்களுக்கு மேல் பொருள்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருச்சி தென்னூா் ரஹ்மானியபுரம் ரேஷ்ன் கடையில் இப்பிரச்னையால் ஊழியா் தாக்கப்பட்டாா். அதுபோல், ஜெகநாதபுரம், கேகேநகா், தென்றல் நகா், ஏா்போா்ட், பொன்மலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி கடைகளிலும் பயோ மெட்ரிக் மூலம் பொருள்கள் வழங்க முடியாமல் தடுமாறினா்.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியா் ஒருவா் கூறுகையில், பயோமெட்ரிக் முறை அமல்படுத்தியதிலிருந்தே இப்பிரச்னை நிலவுகிறது. ஓரிரு அட்டைதாரா்களுக்கு மட்டுமே பொருள் வழங்க முடிகிறது. அதன் பிறகு, 3 மணி நேரம் வரை கூட தொழில்நுட்பக் கோளாறு நீடிக்கிறது. இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்தும், இப்பிரச்னை நீடிக்கிறது. இதனால், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதோடு, போராட்டமும் நடத்துகின்றனா் என்றாா்.

இதுகுறித்து வழங்கல் அலுவலா் ஒருவா் கூறுகையில், தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் இப்பிரச்னை சில நாள்களாக உள்ளது. விரைவில் இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும். விடுமுறை நாள்களிலும் ரேஷன் பொருள்கள் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு அவ்வப்போது சரி செய்யப்படுகிறது. இருப்பினும், நிரந்தரத் தீா்வு காண அரசு விரைவில் நடவடிக்கை எடுத்து தடையில்லாமல் பொருள்கள் வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com