விராலிமலையில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை அதிமுக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்ததால், இடத்தை மீட்டுத் தரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கோயில் பூசாரி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினார். பேச்சுவார்த்தையின்போது ஆக்கிரமிப்பாளர் மகள் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்வேன் என்று மிரட்டியதால் பரபரப்பு.
விராலிமலை அருகே உள்ள பொத்தப்பட்டியில் கருப்பர் கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு சொந்தமான காலி இடம் அப்பகுதியிலேயே உள்ளது. இந்த இடத்தின் அருகே வசித்து வரும் அதிமுக நிர்வாகி சுதாகர் என்பவர் அந்த கோயில் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு காலி செய்ய மறுப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று அந்தக் கோயில் பூசாரி ராசு என்பவர் ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்து தரக்கோரி விராலிமலை - மதுரை நான்கு வழி சாலையில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த விராலிமலை போலீசார், தீயணைப்பு, வருவாய்த்துறையினர் ராசுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு அகற்ற தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து கீழே இறங்கி வந்தார்.
அதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு இடத்திற்கு சென்ற போலீசார், வருவாய் துறையினர் ஆக்கிமிப்பாளரான அதிமுக நிர்வாகி சுதாகருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே இடத்தை காலி செய்து கொடுக்க மாட்டேன் என்று கூறியவாறு சுதாகர் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்து கொளுத்தி கொள்வேன் இடத்தை காலி செய்யச் சொல்லி என்னை வற்புறுத்தினால் என்றார்.
இதனையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது சுதாகரின் மனைவி மற்றும் அவரது மகள்கள் தரையில் அமர்ந்து கதறி அழுதனர். அதில் ஒரு மகள் மண்ணெண்ணை வைத்து கொளுத்தி கொள்வேன் என்று மண்ணெண்ணெய் பாட்டிலுடன், போலீசார் வருவாய் துறையினரிடம் கூறினார். இதனையடுத்து அந்த இடம் ஒரே களோபரமாக மாறியது.
அதனை தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தி விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டு கொள்ளலாம் என்று கூறி இரு தரப்பையும் மாலை வட்டாட்சியர் அலுவலகம் வருமாறு அறிவுறுத்தினர். அதுவரை இருதரப்பும் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபட கூடாது என்று வலியுறுத்தி சென்றனர். இதனால் சுமார் 4 மணி நேரமாக அப்பகுதியில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.