திருச்சி: குடியரசு நாள் விழா அணிவகுப்புக்காக தமிழக அரசு சார்பில் வடிவமைக்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திக்கு திருச்சியில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பு என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஊர்தியில் இடம்பெற்றிருந்த சுதந்திரப் போராட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் வரலாற்று பெருமையை புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொண்டுள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும் குற்றம் சுமத்தினர்.
இதையடுத்து, விடுதலைப் போரில் தமிழகம் என்ற இந்த அலங்கார ஊர்தியை சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த அலங்கார ஊர்தியானது கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பெருநகரங்களில் காட்சிக்கு எடுத்துச் செல்லப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி, மதுரைக்கு சென்ற அலங்கார ஊர்திக்கு திருச்சியில் வெள்ளிக்கிழமை காலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை - திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் மேம்பாலத்தின் இறங்கு பகுதியில் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தலைமையில், இந்த அலங்கார ஊர்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏ-க்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர். மேலும், அலங்கார ஊர்தியையும் பார்வையிட்டு பெருமிதம் கொண்டனர்.