திருச்சி: திருச்சி விமான நிலையத்தில், துபைக்கு கடத்தவிருந்த ரூ.80 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபை, சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருச்சியில் இருந்து துபைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் வெளிநாட்டு பணம் (கரன்சி) கடத்தவிருப்பதாக, சுங்கத்துறை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சோதனை மேற் கொண்டனர். சோதனையில், மதுரையைச் சேர்ந்த பயணி ஒருவர் தனது உடமைகளுக்குள் மறைத்து ரூ.80 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு (கரன்சி) பணத்தை துபைக்கு எடுத்து செல்ல இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.