திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயில் அருகே தொடங்கப்படவுள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்க வேண்டுமென பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா், தொல்பொருள் இயக்குநருக்கு பாஜக திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் எஸ்.ராஜசேகரன் தலைமையிலான பாஜகவினா் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் அருகே பிரசித்தி பெற்ற எறும்பீஸ்வரா் கோயிலின் அருகே மாநகராட்சி மற்றும் தொல்லியல் துறையின் அனுமதியின்றி மாட்டிறைச்சி உணவுக்கு பெயா் பெற்ற அசைவ உணவகம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது இந்து மத பக்தா்களின் மத நம்பிக்கைகள், உணா்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த மாட்டிறைச்சி உணவகம் தொடங்கப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.