மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே 100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மாடு புதன்கிழமை தீயணைப்பு துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் தொப்பிலாம்பட்டி சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(38). இவரது பசுமாடு புதன்கிழமை காலை அவரது தோட்டத்தில் மேய்ச்சலில் இருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 100 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தது. தண்ணீரில் பசு மாடு தத்தளித்தது.
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி மாட்டினை கயிறு கட்டி, ஜேசிபி டிராக்டர்கள் உதவியுடன் மாட்டினை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.