துறையூரில் இளைஞர் ஒருவர் இறந்தது தொடர்பாக போலீஸார் முறையாக விசாரிக்க வேண்டி உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள தெற்கியூரைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் ஆனந்தன் (35). சென்ட்ரிங் மேஸ்திரியாக பணி செய்கிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் சந்தேகத்துக்கு இடமாக இறந்துவிட்டார். இவர் சிலரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என உறவினர் துறையூர் போலீஸில் சந்தேகம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக துறையூர் போலீஸார் கூறி வந்த நிலையில் விசாரணை தாமதமாவதாகக் கூறி இறந்தவரின் உறவினர்கள் சிலர் காவல் நிலையம் முன்பு திருச்சி சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முசிறி டிஎஸ்பி யாஷ்மின், துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸார் பேசியும் மறியல் கைவிடப்படவில்லை. தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று அமரச் செய்து பேசியும் பதட்டத்தை தணித்தும் எச்சரித்தும் அனுப்பினர்.