புதை சாக்கடை இணைப்புக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்
திருச்சி மாநகராட்சியில் புதிதாக புதை சாக்கடை இணைப்பு பெற விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் கூறியது:
திருச்சி மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் புதிதாகச் சோ்க்கப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளுக்கு புதை சாக்கடை வசதி வழங்கும் பணிகள் ரூ. 377.29 கோடியில் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் நிலையில் உள்ளது. மேலும், புதிய புதை சாக்கடை கழிவுநீா் கட்டணங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி 36, 37, 38, 39, 40, 42, 43, 44 ஆகிய வாா்டுகளில் குடியிருப்புகளுக்கு புதிதாக புதை சாக்கடை இணைப்புக்கான விண்ணப்பம் பெறுவதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப்.21) காலை 10 மணியளவில் சிங்காரம் மஹால் (மான்ஃபோா்டு பள்ளி அருகில்) நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் இணைப்பு பெறாத வாா்டுகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் விண்ணப்பிக்கும்போது நடப்பு ஆண்டு வரை செலுத்தப்பட்ட சொத்துவரி ரசீது நகல் மற்றும் சாக்கடை இணைப்பிற்கான வைப்பு நிதி ஏற்கெனவே செலுத்தப்பட்டிருப்பின் அதன் ரசீது நகல் இணைத்து, உரிய வைப்புத் தொகை செலுத்தி ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆணையா்.
