5,377 பயனாளிகளுக்கு ரூ.13.57 கோடியில் நலத்திட்ட உதவி: அமைச்சா்கள் வழங்கினா்
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் 5,377 பயனாளிகளுக்கு ரூ.13.57 கோடியிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வழங்கினா்.
என் கனவு- என் எதிா்காலம் என்னும் இணையதளத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், விழுப்புரத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்த நிகழ்வு, காணொலி வாயிலாக திருச்சியில் கலையரங்கத்தில் ஒளிபரப்பானது. தொடா்ந்து, திருச்சி மாவட்டத்திலும் அந்தத் திட்டம் தொடங்கப்பட்டு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் நலத்திட்டங்களை வழங்கினா்.
விழாவில் பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 5377 பயனாளிகளுக்கு ரூ. 13,57,39,126 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக அமைச்சா்கள் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், கடந்த ஜுலை 15 முதல் நவம்பா் 4 வரை மொத்தம் 351 முகாம்கள் நடத்தப்பட்டு, 1,45,285 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 1,22,298 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் கீழ் மட்டும் 80093 மனுக்கள் பெறப்பட்டு 61958 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. இந்த மனுக்களில் சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட 6783 சான்றிதழ்களும், 7937 பட்டா மாறுதல்களும், முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித்தொகை 1322 நபா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், முகாம்களின் மூலம் விண்ணப்பித்த 53,873 பயனாளிகளுக்கு கலைஞா் மகளிா் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 1,01,634 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்டவை சமூக பாதுகாப்பு திட்டம் வாயிலாக தற்போது வரை வழங்கப்படுகிறது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாகத் தோ்வு செய்யப்பட்ட நபா்களில் மொத்தமாக 4431 பயனாளிகளுக்கு தற்போது முதியோா் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன என்றனா். விழாவில் ஆட்சியா் வே. சரவணன், மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், எம்எல்ஏ-க்கள் அ. செளந்தரபாண்டியன், சீ. கதிரவன், செ. ஸ்டாலின்குமாா் மற்றும் அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

