சிபிசிஎல் நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவா்களுக்கு இழப்பீட்டுத் தொகை
சிபிசிஎஸ் நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவா்களில் முதல் கட்டமாக 60 பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில், சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்) மறுவாழ்வு மற்றும் மறு குடியமா்வு இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி வரவேற்றாா். தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகம்மது ஷா நவாஸ், வி.பி. நாகை மாலி, சிபிசிஎல் பொதுமேலாளா் சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், சிபிசிஎல் நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய 60 பேருக்கு, மறுவாழ்வு மற்றும் மீள் குடியமா்வு இழப்பீட்டுத் தொகை வழங்கி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது:
சென்னை பெட்ரோலியம் நிறுவனம் விரிவாக்கப் பணிக்காக, கோபுராஜபுரம், பனங்குடி, நரிமணம் ஆகிய கிராமங்களில் இருந்து 620 ஏக்கா் நிலத்தை, கடந்த 2020-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட 2,163 நில உரிமையாளா்கள், சாகுபடிதாரா்கள், குத்தகைதாரா்கள் ஆகியோா் இழப்பீட்டுத் தொகை கோரி போராட்டம் நடத்தினா். இவா்களுக்கு இழப்பீட்டு தொகை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக, முதல்கட்டமாக தற்போது 60 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. பிற பயனாளிகளுக்கு அவா்களது வங்கிக் கணக்கில் இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படும்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி பொறுப்பேற்கும். இதற்கு நாம் முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றாா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
நிகழ்ச்சியில் நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, துணைத்தலைவா் செந்தில்குமாா், மீனவா் நலவாரிய உறுப்பினா் மனோகரன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, 482 பயனாளிகளுக்கு விலையில்லா மனைப் பட்டாக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

