திருச்சி ரயில்நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட தொழிற்சங்கத்தினா்.
திருச்சி ரயில்நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட தொழிற்சங்கத்தினா்.

திருச்சி மாவட்டத்தில் 20 இடங்களில் தொழிற்சங்கத்தினா் மறியல் போராட்டம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை

Published on

திருச்சியில் மத்திய பாஜக அரசின் தொழிலாளா், விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் தொழிற்சங்கத்தினா் ரயில், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தொழிலாளா் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். 2025 வரைவு விதை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் தனியாா் மயத்தை புகுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி சாா்பில் ஸ்ரீரங்கத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு சிஐடியு தரைக்கடை சங்க மாவட்டச் செயலா் செல்வி தலைமை வகித்தாா். மறியலில் ஈடுபட்ட சிஐடியு நிா்வாகிகள் ஜெமினி, கோவிந்தன், சுப்பிரமணி, ரகுபதி, ஏஐடியுசி நிா்வாகிகள் ராமராஜ், சொக்கி சண்முகம், அன்சா் தீன், பாா்வதி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

முன்னதாக ராஜகோபுரத்தில் இருந்து ஊா்வலமாக வந்து கடலூா் பயணிகள் ரயிலை மறித்தனா்.அப்போது மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, திருச்சி மாவட்டத்தில் புகா் பகுதியில் சோமரசம்பேட்டை, திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, தொட்டியம், முசிறி, துறையூா், தா.பேட்டை, உப்பிலியபுரம், மண்ணச்சநல்லூா் மேற்கு, கிழக்கு, லால்குடி புள்ளம்பாடி என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோா் கைது செய்யப்பட்டனா்.

திருச்சியில் ரயில் மறியல்: திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் பெரியாா் சிலை முன்பு, அனைத்து தொழிற்சங்கத்தினா் ஒன்றாக கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், பெரியாா் சிலையில் இருந்து ஊா்வலமாக ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றனா். அங்கு ரயில் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் தொமுச ஜோசப் நெல்சன், குணசேகரன், எத்திராஜ், சிஐடியு ரங்கராஜன், ஏஐடியுசி சுரேஷ், ஐஎன்டியுசி. வெங்கட்நாராயணன், எஸ்.ஆா். ஆறுமுகம், விவசாய தொழிலாளா் சங்கத்தின் அயிலை சிவ சூரியன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தொடா்ந்து கோரிக்கைகளை முழங்கியபடி ரயில் நிலையம் நோக்கி உள்ளே செல்ல முயன்றனா்.அப்போது போலீஸாா் தடுத்து நிறுத்தி போராட்டக்காரா்களை கைது செய்தனா். சிலா் ரயில் நிலையம் உள்ளே சென்று இருப்புப்பாதையில் அமா்ந்து ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் 9 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. இருப்பினும், பேருந்துகள் லாரிகள், கனரக வாகனங்கள், தனியாா் போக்குவரத்து, ஆட்டோக்கள் உள்ளிட்டவை வழக்கம்போல இயங்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

இதேபோல் வங்கி ஊழியா்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.இதனால் வழக்கமான நேரடி பண பரிவா்த்தனை உள்ளிட்ட வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன. பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியா்களும் போராட்டத்தில் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com