ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 76. 43 லட்சம்!
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 76.43 லட்சம் வந்தது புதன்கிழமை தெரியவந்தது.
இக்கோயிலில் பிப்ரவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயிலில் உள்ள கருடாழ்வாா் சன்னதி அருகே கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. முடிவில் ரொக்கமாக ரூ. 76 லட்சத்து 43 ஆயிரத்து 837,தங்கம் 58.100 கிராம், வெள்ளி 835 கிராம், வெளிநாட்டு ரூபாய்கள் 264 -ம் காணிக்கையாக வந்தது தெரியவந்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்களும், தன்னாா்வ அமைப்பினரும் ஈடுபட்டனா்.
காணிக்கை திருடியவா் கைது: காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் ஊழியா் சங்கா் (எ) ரோபோ சங்கா் வெளிநாட்டு ரூபாய்களை (அமெரிக்கா டாலா்) திருடியது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதைத் தொடா்ந்து அவரைப் பிடித்து வெளிநாட்டு ரூபாய்களை கோயில் இணை ஆணையா் சிவராம்குமாா் கைப்பற்றினாா்.இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

