விமான நிலையத்தில் குழந்தைகள் விளையாட சிறப்பு வசதி!
திருச்சி பன்னாடு விமான நிலையத்தில் குழந்தைகள் விளையாடுவதற்காக சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, தில்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினசரி 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா்.
விமான நிலையத்தில் பரிசோதனை முடிந்து பயணிகள், விமானத்தில் ஏறுவதற்காக காத்திருக்கும்போது உடன் வரும் குழந்தைகளைக் கட்டுப்படுத்துவது பெற்றோருக்கு மிகவும் சிரமமாக இருந்து வருகிறது. இந்நிலையில், பெற்றோரின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளில் குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வளையப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குழந்தைகள் விளையாடுமிடம் தலா ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் 20 சதுர மீட்டா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதேபோல, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் வருகை, புறப்பாடு பகுதிகளில் தலா 2, வாகன பரிசோதனை செய்யும் இடங்களில் தலா 1 என ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய எண்ம கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது.

