கோப்புப் படம்
கோப்புப் படம்

ஓய்வுபெற்ற எஸ்எஸ்ஐ சாலை விபத்தில் உயிரிழப்பு

Published on

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் ஓய்வுபெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

திருச்சி விமான நிலையம் வயா்லஸ் சாலை அந்தோணியாா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் இருதய பிரான்சிஸ் (67). திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி, 2016-ஆம் ஆண்டு ஓய்வுபெற்றாா்.

இந்நிலையில், காய்கறி வாங்குவதற்காக வீட்டில் இருந்து காந்தி மாா்க்கெட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை 6.45 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென சாலையைக் கடந்த மாடு மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், தடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இருதய பிரான்சிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், இருதய பிரான்சிஸின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com