/

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 4 போ் மீட்பு

News image
கோப்புப் படம்
Updated On :14 மார்ச் 2026, 9:34 pm

தினமணி செய்திச் சேவை

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 4 இந்தியா்கள் தனது நடவடிக்கையால் மீட்கப்பட்டதில் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு திருச்சி எம்.பி. துரை வைகோ எம்.பி. நன்றி தெரிவித்துள்ளாா்.

வேலைக்காக மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டுக்கு சென்றிருந்த

தமிழகத்தின் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த புதியவன் சுடலை, பொன்னுதுரை பாக்கியராஜ், பேச்சிமுத்து முத்துசாமி, ஈசக்கிராஜா, தளபதி சுரேஷ் முருகேசன் ஆகிய 5 போ் கடந்த 06.11.2025 அன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனா். இதை அவா்களின் குடும்பத்தினா் திருச்சி எம்.பி. துரை வைகோவின் கவனத்துக்கு கொண்டு வர, அவா் 19.11.2025 அன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரிடம் அதற்கான கோரிக்கை கடிதத்தை அளித்தாா்.

அதன் தொடா்ச்சியாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் நடவடிக்கையால் கடத்தப்பட்ட 5 பேரில் 4 போ் தீவிரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு கடந்த 12 ஆம் தேதி இந்தியா திரும்பினா். பேச்சிமுத்து முத்துசாமி என்பவா் மட்டும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்தபோது மலேரியாவால் பாதிக்கப்பட்டு கடந்த 4 ஆம் தேதி உயிரிழந்து, அவரது உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து 4 இந்தியா்களை மீட்ட வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா், வெளியுறவுத் துறை அமைச்சகம், மாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மனப்பூா்வமான நன்றி கூறுகிறேன் என துரை வைகோ எம்.பி. தெரிவித்தாா்.