
திருச்சி-அபுதாபி, கோலாலம்பூா் விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி
திருச்சியிலிருந்து அபுதாபி மற்றும் கோலாலம்பூருக்கு செல்ல வேண்டிய விமானங்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

விமானம் - கோப்புப் படம்
திருச்சியிலிருந்து அபுதாபி மற்றும் கோலாலம்பூருக்கு செல்ல வேண்டிய விமானங்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா், மலேசியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும், உள்நாட்டில் சென்னை, பெங்களூரு, தில்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விமானங்கள் பற்றாக்குறை காரணமாக, ஏற்கெனவே ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் திருச்சி - சிங்கப்பூா், சிங்கப்பூா் - திருச்சி விமானங்கள் செப்டம்பா் 1 முதல் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி - அபுதாபி, திருச்சி - கோலாலம்பூா் விமானங்களும் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினா். விமானங்கள் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி விமான நிறுவன ஊழியா்களுடன் வாக்குவாதம் செய்தனா்.
இதேபோல, திருச்சி - சென்னை, திருச்சி - பெங்களூரு விமானங்கள் இரு வழித்தடங்களிலும் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சிங்கப்பூா் விமானம் தாமதம்: விமானங்கள் பற்றாக்குறையால் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சில விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு வரவேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 7 மணி நேரம் தாமதமாக காலை 9.35 மணிக்கு வந்தடைந்தது.
இதேபோல, மறு மாா்க்கத்தில் திருச்சியிலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 7.22 மணி நேரம் தாமதமாக காலை 10.52 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டது. விமானங்களின் தாமதத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




