ஆரணியில் மீண்டும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

ஆரணி, அக்.27:ஆரணியில் மின்வெட்டு நேரம் மேலும் அதிகரித்துள்ளதை அடுத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.   ஆரணியில் ஏற்கெனவே 2 மணி நேரம் மின்வெட்டு இருந்து வந்தது. கடந்த இ
Updated on
1 min read

ஆரணி, அக்.27:ஆரணியில் மின்வெட்டு நேரம் மேலும் அதிகரித்துள்ளதை அடுத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

  ஆரணியில் ஏற்கெனவே 2 மணி நேரம் மின்வெட்டு இருந்து வந்தது. கடந்த இரு தினங்களாக மின்வெட்டு நேரம் மேலும் ஒரு மணி நேரம் அதிகரித்துள்ளது.

  இதுகுறித்து மின்வாரியத்தில் விசாரித்தபோது, அதிகாரப்பூர்வ அறிவிப்பின்றி மின்நேரத்தை அதிகரித்துள்ளதாகவும், மின்பகிர்மான அலுவலக தகவலை பின்பற்றி மின்வெட்டு செய்து வருகிறோம் என்றும் கூறினர்.

  இந்நிலையில் ஆரணியில் உள்ள 110 முறுக்காலைகளில் பணிபுரியும் சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

  கூடுதல் நேரம் பணிபுரிந்து வருவாய் ஈட்டி வந்த தொழிலாளர்கள் தற்போது வருவாய் இழப்பை சந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

  8 மணி நேர பணி நேரம் 5 மணி நேரமாக குறைந்துள்ளதோடு, மணிக்கு ரூ.8 கூலி வீதம் வழங்கப்படுவதால் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு ரூ.24 வருவாயை இழக்கத் தொடங்கியுள்ளனர்.

  பட்டு முறுக்காலை மின்சாரத்தில் இயங்கினால் ஒரு மணி நேரத்துக்கு 5 முதல் 10 யூனிட் செலவாகும். ஆனால் ஜெனரேட்டரில் ஒரு மணி நேரத்திற்கு இயங்கினால் 4 லிட்டர் டீசல் செலவாகிறது.

  பட்டு முறுக்காலைகளில் ஜெனரேட்டர் மூலம் பணி மேற்கொள்ளும்போது அதிக செலவு ஆகிறது என்பதால் தற்போது ஜெனரேட்டர் மின்சாரத்தை பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது.

  3 நேர மின்வெட்டு பட்டு நூல் உற்பத்தியையும் பாதித்துள்ளது. இதனால் பட்டுச் சேலை தயாரிப்புக்கான பட்டு நூல் தட்டுப்பாடும் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அரிசி ஆலைகள் பாதிப்பு

  ஆரணி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்குகின்றன. அரிசி ஆலையில் நெல் களத்தில் உலர்த்துவது, ஆலைக்குள் எடுத்துச் சென்று இயந்திரத்தில் கொட்டுவது, வரும் லாரிகளில் இருந்து மூட்டைகளை இறக்குவது போன்ற பணிகளில் சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  மின்வெட்டு காரணமாக இவர்களின் பணி பாதிக்கப்பட்டுள்ளது. வரவேண்டிய கூலித் தொகை குறைந்துள்ளது. அரிசி ஆலைகளை ஜெனரேட்டர் மூலம் இயக்கினால் 5 மடங்கு கூடுதல் செலவாகிறது என்று உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

  ஆரணியில் தற்போது அதிகரித்துள்ள மின்தடையால் 20 ஆயிரம் பேரின் வருவாய் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, ஆலைகளுக்கு மட்டுமாகிலும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே ஆலை உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com