மூடிக்கிடக்கும் ஆயுர்வேத மருத்துவமனை!

குடியாத்தம், ஆக. 21: குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட சந்தப்பேட்டையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேத மருத்துவமனை மூடிக் கிடக்கிறது. குடியாத்தம் நகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பில், பேர்ணாம்பட்டு சாலை ச
Updated on
1 min read

குடியாத்தம், ஆக. 21: குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட சந்தப்பேட்டையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேத மருத்துவமனை மூடிக் கிடக்கிறது.

குடியாத்தம் நகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பில், பேர்ணாம்பட்டு சாலை சந்தப்பேட்டையில் ஆயுர்வேத மருத்துவமனை பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. ஆயுர்வேத மருத்துவர் மற்றும் மருந்தாளுநருடன் இயங்கி வந்த இம்மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இம்மருத்துவமனைக்கு மருந்து, மாத்திரைகளுக்காக நகராட்சி நிர்வாகம் ஆண்டுக்கு | 50 ஆயிரம் வரை ஒதுக்கீடு செய்தது.

2006-ம் ஆண்டு நிரந்தர மருத்துவர் ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து தொகுப்பூதிய அடிப்படையில் மருத்துவர் ஒருவர் ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு அவர் தனக்கு பணி நிரந்தரம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் இருந்த மருந்தாளுநரும் வேறு இடத்தில் நிரந்தர வேலை கிடைத்ததால் சென்றுவிட்டார். இதனால் ஆயுர்வேத மருத்துவமனை நிரந்தரமாக மூடப்பட்டது.இம்மருத்துவமனையை நகர மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புற கிராம மக்களும் யன்படுத்தி வந்த நிலையில், மருத்துவர், மருந்தாளுநர் இன்றி மருத்துவமனை மூடப்பட்டது ஆயுர்வேத மருத்துவத்தை நாடும் பொதுமக்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கியுள்ளது.

இதனால் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டடம் பராமரிப்பின்றி சேதமடைந்து வருகிறது. குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கூட ஆயுர்வேத மருத்துவப் பிரிவு இல்லாத நிலையில், இந்த மருத்துவமனையை மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் என்பது நகர மக்களின் விருப்பமாக உள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஆர். சுப்பிரமணியன் கூறியது:

தொகுப்பூதிய அடிப்படையில் ஆயுர்வேத மருத்துவர், மருந்தாளுநர் எவரும் பணிக்கு வர விரும்பவில்லை. இதனால் மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவமனையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழும்பட்சத்தில் உயரதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, நகர்மன்ற ஒப்புதல் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com