செய்யாறு, ஜன. 8: தமிழக வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அடையாள அட்டை மூலம் விவசாயிகள் வேளாண் துறை மூலம் வழங்கப்படும் இடுபொருள்கள் மற்றும் இதர பொருள்களை மானிய விலையில் வாங்கவும், அரசு வழங்கும் சலுகைகளை அதிகாரிகளின் பரிந்துரை இல்லாமல் எளிதில் பெறவும் முடியும். விவசாயிகள் விவசாயம் தொடர்பான சுற்றுலா செல்லும்போதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வேளாண் கிடங்குகளில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் விவசாயி அடையாள அட்டையை ஒருமுறைப் பெற்றுவிட்டால் போதும், ரேஷன் அட்டையை போல ஆண்டுக்கணக்கில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
டிராக்டர், பவர் டில்லர் போன்ற வேளாண் உபகரணங்கள் வாங்க வங்கிகளில் கடன்பெறுவதற்கு இந்த விவசாயி அடையாள அட்டை சான்றிதழாக இருக்கும் என வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அடையாள அட்டையில் விவசாயின் பெயர், பிறந்ததேதி மற்றும் வயது, கல்வித்தகுதி, முகவரி, தொலைபேசி-கைபேசி எண்கள், மின் அஞ்சல் முகவரி, புன்செய், மானாவாரி நிலம் சர்வே எண், உட்பிரிவு, நன்செய் நிலம், மின் இணைப்பு விவரம், வங்கிக் கணக்கு எண், வங்கியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
இந்த விவசாயி அடையாள அட்டைகள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செய்யாறு கோட்டம் உள்பட தமிழகம் முழுவதும் 2011 ஜனவரி முதல் வாரத்தில் இருந்து, அந்தந்தப் பகுதிகளில் உள்ள விவசாய வேளாண் கிடங்குகளில் இடுபொருள்கள் வாங்கும் போது விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என செய்யாறு வேளாண்மை உதவி இயக்குநர் எ.எம்.சாந்தி தெரிவித்துள்ளார்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை, ஜன. 8: மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளைத் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
இதுபோல் வந்தவாசியில் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது(படம்). வட்டார துணைத் தலைவர் கா.முனவர்உசேன் தலைமை வகித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.