ஆரணி, பிப். 11: ஆரணியில் தினமும் 8 மணி நேரம் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் பட்டு முறுக்காலைத் தொழிலாளர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் முக்கியத் தொழிலாக பட்டுச் சேலை உற்பத்தியும், அரிசி உற்பத்தியும் உள்ளன. பட்டுச் சேலை உற்பத்தி செய்யும் தொழிலில் மட்டும் சுமார் 75 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் கைத்தறி நெசவாளர்கள், பட்டு முறுக்காலைத் தொழிலாளர்கள், பட்டுச் சேலை விற்பனையாளர்கள் அடங்குவர்.
பட்டு முறுக்காலையில் பட்டு இழையை முறுக்கேற்றியபின்தான் சேலையை நெய்ய முடியும். ஆரணி பகுதியில் மட்டும் சுமார் 300 பட்டு முறுக்காலைகள் உள்ளன. இதில் 5 ஆயிரம் ஆண்கள், பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த ஆலையில் ஒரு மணி நேரம் பணி புரிந்தால் ரூ.10 முதல் ரூ.15 வரை கூலி கிடைக்கும். நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
கடந்த சில தினங்களாக 8 மணி நேரத்துக்கும் அதிகமாக மின் வெட்டு ஏற்படுவதால் தொழிலாளர்கள் 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை மட்டுமே பணிபுரிய முடிகிறது. இதனால் இத்தொழிலை நம்பியுள்ள இவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஜெனரேட்டர் மூலம் பட்டு ஆலையை இயக்கினால் பெரும் செலவு ஏற்படுகிறது என்று பட்டு முறுக்காலை உரிமையாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், இதுகுறித்து பட்டு முறுக்காலை உரிமையாளர்கள் சங்கத் துணைத் தலைவர் கே.ஆர்.சண்முகம் கூறுகையில், மின்வெட்டு காரணமாக ஆலையை இயக்காமலே உள்ளோம். இதனால் சில தினக்கூலி தொழிலாளர்கள் வேறு பணிக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
ஆகவே, தொழிற்சாலைகளுக்கு தடையின்றி மின் விநியோகம் வழங்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முறுக்காலைகளை நம்பி வாழும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.