ஆரணி, பிப். 16: ஆரணியில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட வெங்கட்ராமன் பூங்காவைச் சீரமைக்க வேண்டுமென்ற கோரிக்கை பொதுமக்களிடம் வலுத்து வருகிறது.
ஆரணி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ளது வெங்கட்ராமன் பூங்கா. 1903-ம் ஆண்டு இங்கிலாந்து மன்னரும், இந்திய நாட்டு சக்கரவர்த்தியுமான 7-ம் எட்வர்டு மகாராணி அலெக்சாந்திரியாவின் முடிசூட்டு விழா நடைபெற்ற தன் நினைவாக இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 1932-ம் ஆண்டு வெங்கட்ராமன் என்பவர் ஆட்சியராக இருந்துள்ளார். அவர் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதன் நினைவாக பூங்காவின் மையத்தில் சுதந்திர நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்கா ஆரணி மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும் இடமாக இருந்து வந்தது. நகரின் மையத்திலும், பேருந்து நிலையத்துக்கு அருகிலும் இருப்பதால் மாலை நேரங்களில் ஏராளமானோர் இங்கு வந்து இளைப்பாறிவிட்டுச் செல்வர். இவ்வாறு பல சிறப்புகளை பெற்ற இப்பூங்கா கடந்த சில ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி உள்ளது.
முட்புதர்கள் வளர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக பூங்காவை பூட்டி வைத்துள்ளனர். இப்போது அது சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருகிறது.
இதுகுறித்து கேட்க ஆணையர் சசிகலாவுடன் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால் நகராட்சி மேலாளர் பழனியிடம் கேட்டதற்கு, இப் பூங்காவைச் சீரமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.
விரைவில் பூங்கா சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.