செங்கம், ஜன. 21: செங்கம் அருகே 5 ஆண்டுகளுக்கு முன் அரசு கட்டித் தந்த வீடுகளுக்கு பட்டா வழங்கப்படுமா என கிராம மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
ஜமுனாமரத்தூர் ஒன்றியம் கல்லாத்தூர் ஊராட்சிக்குட்பட்டது துரிஞ்சிகுப்பம் கிராமம். இக் கிராமத்தில் குப்பனத்தம் அணை கட்டப்பட்டுள்ளது. அணை கட்டும்போது அங்கு வசித்துவந்த 105 குடும்பங்களை வெளியேற்றிய பொதுப்பணித் துறையினர், அவர்களுக்கு மாற்று இடத்தில் அரசு சார்பில் வீடுகள் கட்டித்தந்துள்ளனர்.
இந்நிலையில் அரசு கட்டித் தந்த வீடுகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மனைப்பட்டா வழங்கப்படவில்லை, மின் இணைப்பையும் தங்கள் பெயருக்கு மாற்றித் தரவில்லை என்று துரிஞ்சிகுப்பம் கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.
அணைப் பகுதியில் விளை நிலங்களை ஒப்படைத்த விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரத்துக்கு உரிய மாற்று ஏற்பாடுகள் செய்துதரப்படவில்லை என்றும் குறை கூறுகின்றனர்.
இந்நிலையில் அப் பகுதி மக்கள், ஊராட்சி மன்ற தலைவர் சிவானந்தம் தலைமையில் திருண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மற்றும் சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் அண்மையில் மனு அளித்துள்ளனர்.
வீட்டுமனைப் பட்டா மற்றும் மாற்று வாழ்வாதார ஏற்பாடுகள் போன்ற தங்களின் கோரிக்கைகள் விரைந்து தீர்க்கப்பட வேண்டும் என துரிஞ்சிகுப்பம் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.