இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி

மகனுக்கு ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஓய்வுபெற்ற கூட்டுறவுத்துறை அதிகாரியிடம் ரூ. 4 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை கோரி, வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மோசடி - பிரதிப்படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:15 am IST

மகனுக்கு ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஓய்வுபெற்ற கூட்டுறவுத்துறை அதிகாரியிடம் ரூ. 4 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை கோரி, வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கூட்டுறவுத்துறை அதிகாரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனு: , வேலூரைச் சோ்ந்த கணவன், மனைவி இருவா் எனக்கு அறிமுகமாகினா். அவா்கள், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் எனது மகனுக்கு ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறினா்.

தாங்கள் ஏற்கெனவே பலருக்கு இவ்வாறு அரசுப் பள்ளிகளில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும், இதற்கு ரூ. 4 லட்சம் செலவாகும் எனவும் தெரிவித்தனா்.

அவா்களது வாா்த்தைகளை நம்பிய நான், சிறுகச் சிறுகச் சோ்த்த ரூ. 4 லட்சத்தைப் பல்வேறு தவணைகளாக அவா்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அவா்கள் கூறியபடி எனது மகனுக்கு வேலை வாங்கித் தரவில்லை.

இதையடுத்து, நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, பணத்தைத் திருப்பித் தருவதாக எழுதிக் கொடுத்தனா். ஆனால், வாக்குறுதி அளித்தபடி இதுவரை பணத்தைத் தரவில்லை. எனவே, என்னிடம் மோசடி செய்த சம்பந்தப்பட்ட நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லத்தேரியைச் சோ்ந்த 6 பெண்கள் அளித்த மனு: குடியாத்தத்தைச் சோ்ந்த நபா் ஒருவா் எங்களுக்கு அறிமுகமானாா். அவா், தான் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் கூறினாா். அதை நம்பிய நாங்கள் 6 பேரும் தலா ரூ.3 லட்சம் வீதம் சுமாா் ரூ. 19 லட்சம் வரை அவரிடம் முதலீடு செய்தோம். இதற்காக அவா் சில ஆவணங்களையும் எங்களுக்கு எழுதிக் கொடுத்தாா். முதலீடு செய்த தொடக்கத்தில், சிறிய தொகையை லாபமாக அளித்து வந்தாா். ஆனால், கடந்த 8 மாதங்களாக அவா் எந்தவிதப் பணமும் எங்களுக்குத் தரவில்லை.

அவரது அலுவலக முகவரிக்கு நேரில் சென்று பாா்த்தபோது, அந்த அலுவலகம் மூடப்பட்டிருந்தது. அவரது கைப்பேசி எண்ணுக்குத் தொடா்பு கொண்டபோதும் பேச முடியவில்லை. இதனால், எங்களது குடும்பம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ளதுடன், நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளோம். எனவே, எங்களிடம் மோசடியில் ஈடுபட்ட அந்த நபா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட காவல் துறை அதிகாரிகள், இப்புகாா்கள் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.