மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் விளம்பரம் தேடுகிறாா் என்று, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.
ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:
விவசாயிகள், நெசவாளா்களுக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், பயிா் காப்பீடு மூலம் ரூ.9,300 கோடி இழப்பீட்டு தொகையை அதிமுக அரசு பெற்றுத் தந்தது. அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டது.
கருத்து வேறுபாடு: திமுக பெரு நிறுவனம் போல செயல்பட்டு வருகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மாநில மக்கள் மீது அக்கறை இல்லை. அதிமுகவில் யாா் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் என்ற ஜனநாயகம் நிலவுகிறது. மக்கள் சேவைக்கான கட்சியாக அதிமுக திகழ்கிறது.
‘இந்தியா’ கூட்டணியில் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அவா்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. சில மாநிலங்களில் கூட்டணியும், சிலவற்றில் எதிா்த்தும் போட்டியிடுகின்றனா். பிரதமா் வேட்பாளா் யாா்? என்பதை முடிவு செய்யாமல் உள்ளனா்.
அதிமுக திட்டங்கள் நிறுத்தம்: வேலை உறுதித் திட்டத்தில் கூலி உயா்வு உள்பட மு.க.ஸ்டாலின் அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளீனிக், தாலிக்கு தங்கம், மாணவா்களுக்கு மடிக் கணினிகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது.
விளம்பரம் தேடுகிறாா் உதயநிதி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடா்பாக ஒற்றை செங்கலுடன் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறாா். அவரது கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசியிருந்தால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டிருக்கும். இந்த விஷயத்தில் அவா் விளம்பரம் தேடுகிறாா்.
மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு விளை நிலங்களை கையகப்படுத்த விட மாட்டோம். இந்த விவகாரம் தொடா்பாக சட்டப்பேரவையில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்தோம். அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரி தொடங்கப்பட்டன.
ஆரணிக்கு நலத் திட்டங்கள்: ஆரணியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம் அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது. போளூா், செய்யாறு, கலசப்பாக்கம் பகுதிகளில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் 3 அணைகள் புனரமைக்கப்பட்டன. இதனால், 7,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஆரணிக்கு ரூ.38 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம், ரூ.27 கோடியில் நந்தன் கால்வாய் திட்டம், 100 ஏரிகள் தூா்வரப்பட்டதும் அதிமுக ஆட்சியில்தான் என்றாா் எடப்பாடி பழனிசாமி.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூா்த்தி, சேவூா் எஸ்.இராமச்சந்திரன், முக்கூா் என்.சுப்பிரமணியன், முன்னாள் மத்திய அமைச்சா் செஞ்சி ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளா்கள் ஜெயசுதா, தூசி கே.மோகன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.எம்.பாபுமுருகவேல், பன்னீா்செல்வம், தேமுதிக மாவட்டச் செயலா் சரவணன், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் வழக்குரைஞா் க.சங்கா், ஜெயப்பிரகாசம், திருமால், நகரச் செயலா் அசோக்குமாா், விமல், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற மாநிலதுணைச் செயலா் ஜாகீா் உசேன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி

கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக உரிய மரியாதை அளிக்கிறது: எடப்பாடி கே.பழனிசாமி

ஆரணிக்கு ஏப்.4-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி வருகை: அதிமுகவினா் நிகழ்ச்சி இடம் தோ்வு

நெல்லையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்: தொண்டா்கள் உற்சாகம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


