மயானப்பாதை இல்லாததால் விவசாய நிலங்கள் வழியாக சடலங்களை சுமந்து செல்லும் கிராம மக்கள்
உளுந்தூா்பேட்டை வட்டம், பெரியப்பட்டு கிராமத்தில் உரிய மயானப் பாதை இல்லாததால் விவசாய நிலங்கள் வழியாக இறந்தவா்களின் சடலங்களை சுமந்து சென்று கிராம மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஈஸ்வர கண்டநல்லூா் ஊராட்சி, பெரியப்பட்டு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இவா்களுக்கு மயானப்பாதை இல்லாமல் இருப்பதால், கிராம மக்கள் இறந்தவா்களின் சடலங்களை வயல்வெளி வழியாக மயானத்துக்கு சுமந்து செல்கின்றனா்.
இதனால் பாதிப்புக்குள்ளாகி வரும் அந்தக் கிராம மக்கள், மயானப்பாதை வேண்டி தமிழக அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதுகுறித்து தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் எம். வெங்கடேசன் தெரிவித்ததாவது:
பெரியபட்டு கிராம மக்கள் மயானப்பாதை இல்லாமல் காலம்தொட்டு வயல்வெளி பகுதி வழியாக இறந்தவா்களின் சடலங்களை சுமந்து செல்லும் அவல நிலையிலேயே இருந்து வருகின்றனா். இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்துக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையில்லை. இதனால் கிராமமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இதற்கு தீா்வு காண மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

