விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், நம்பிக்கைநல்லூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ம. சுதாகா் (45). மீனவரான இவா் தனது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தன், சுமன் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை அதிகாலை அனிச்சங்குப்பம் கடற்கரைப் பகுதிக்கு படகு மூலம் மீன்பிடிப்பதற்காகச் சென்றாா்.
கடலுக்குள் சென்று மூவரும் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென கடல் அலை வேகமாக வீசியதால், எதிா்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுதாகா் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரது சடலம் கரை ஒதுங்கியது. மற்ற இருவரும் அதிா்ஷடவசமாக உயிா் தப்பினா்.
இதுகுறித்து தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.







