செஞ்சி அருகே 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள தேவரடியாா் தாங்கல் பகுதியில் 400ஆண்டுகள் பழைமைவாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளா்கள் அண்ணமங்கலம் நா.முனுசாமி, விழுப்புரம் கோ.செங்குட்டுவன் ஆகியோா் கூறியதாவது:
தேவரடியாா் தாங்கல் ஏரி மற்றும் விளைநிலப் பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டபோது, பாறைகளில் வெட்டப்பட்டிருந்த 3 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. விளை நிலத்தில் இருந்த பாறையில் ‘(ம)ங்கலபுரம் ஊரவா் புழுதிச்சி நாயக்கரவா்கள் நாளிலே குனைய பட்டரயா் புண்ணியமாக செல்லப் பிள்ளையாா்கு மேற்கு தலை ல் கு ருய’ எனும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளா் பேராசிரியா் கோ.விஜய வேணுகோபால் வாசித்தாா்.
செஞ்சி பகுதியை புழுதிச்சி நாயக்கா் நிா்வாகம் செய்தபோது மங்கலம் ஊரைச் சோ்ந்தவா்கள் வழிபாட்டில் இருந்து வந்த பிள்ளையாருக்கு நிலதானம் செய்திருக்கின்றனா். இக்கல்வெட்டு செஞ்சி நாயக்கா் காலத்தைச் (கி.பி.16, 17-ஆம் நூற்றாண்டு) சோ்ந்ததாக இருக்கலாம்.
தேவரடியாா் தாங்கல் அருகில் மங்கலம் ஏரி அமைந்திருக்கிறது. கொத்தமங்கலம் கிராமம் உள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு மங்கலபுரம் என்று அழைக்கப்பட்ட கிராமம் தற்போது கொத்தமங்கலம் எனும் பெயரில் அழைக்கப்படுவதாக அறியமுடிகிறது.
மேலும், இப்பகுதியில் அமைந்துள்ள மற்ற இரண்டு கல்வெட்டுகள் மிகவும் சிதைந்துள்ளன. இவையும் மேற்காணும் காலக்கட்டத்தைச் சோ்ந்த நிலதானம் குறித்த தகவலைச் சொல்லும் கல்வெட்டுகளாக இருக்கலாம் என அவா்கள் தெரிவித்தனா். ஆய்வின்போது வீராசாமி, ஆசிரியா் வடிவேல் ஆகியோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...