நெய்வேலி பகுதியில் தொடர் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இருவரை நெய்வேலி நகரிய போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
நெய்வேலி நகரியத்தில் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களைக் குறி வைத்து, மர்ம நபர்கள் பைக்கில் வந்து தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்தனர். இங்கு தொடர்ச்சியாக 5 சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் நெய்வேலி நகரிய மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் பேரில், நெய்வேலி நகரிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
மேலும், தனிப் படைகள் அமைக்கப்பட்டு, தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில், நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளர் ரவீந்திரராஜ், உதவி ஆய்வாளர்கள் பாரதி, குமார் ஆகியோர் வட்டம் - 7 சோதனைச் சாவடி அருகே புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர்.
அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், நெய்வேலி அருகே உள்ள பெரியகாப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் ராயர் (எ) சிவக்குமார் (35), கள்ளக்குறிச்சி வட்டம், இத்திலி கிராமத்தைச் சேர்ந்த நல்லுசாமி மகன் மீசை (எ) பழனிசாமி (37) என்பதும், இவர்கள் நெய்வேலி நிறுவனத்துக்குச் சொந்தமான விருந்தினர் விடுதியில் தங்கி, சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 141 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.