/

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பள்ளங்கள்!

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பெரிய பள்ளங்களால் பயணிகள் அவதிப்படுகின்றனர். 

Updated On :25 டிசம்பர் 2018, 8:55 am IST

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பெரிய பள்ளங்களால் பயணிகள் அவதிப்படுகின்றனர். 
பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு அரசு, தனியார் பேருந்துகள் நாள்தோறும் 1,500 நடைக்கு மேல் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றன. பயணிகள், பேருந்துகளின் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து, பண்ருட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பேருந்து நிலையத்தின் மேற்கு, தெற்கு பகுதிகளில் இருந்த கட்டங்கள் இடிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.
பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே சிமென்ட் தரைத் தளம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் மட்டும் தார் தரைத் தளம்  அமைக்கப்பட்டது. தற்போது, தார் தரை தளம் பகுதி ஆங்காங்கே சேதமடைந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், பேருந்து ஓட்டுநர்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர். பேருந்துகளை பிடிக்க அவசரமாக செல்லும் பயணிகள் பள்ளத்தை கவனிக்காமல் அதில் திடீரென காலை வைத்து கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனர். இதனால் விபத்து அபாயம் தொடர்கிறது. 
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பெரிய அளவிலான பள்ளங்கள் 3 இடங்களில் உள்ளன. பள்ளங்களில் தேங்கியுள்ள அசுத்த நீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பேருந்து நிலையத்தில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு சரியாக எரிவதில்லை. மேலும், பயணிகளுக்கு இடையூறாக மாடுகள், நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இந்தப் பிரச்னைகள் குறித்து நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.