விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசிமகத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விருத்தாசலத்தில் புகழ்பெற்ற விருதாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டுக்கான திருவிழா பிப்ரவரி 20- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, நாள்தோறும் காலை - மாலையில் சிறப்பு பூஜைகள், உற்சவங்கள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுதலும், தேரோட்டமும் புதன்கிழமை நடைபெற்றன.
இதனை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணிக்கு விருத்தகிரீஸ்வரர், விருதாம்பிகை, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட 5 திருத்தேர்களிலும் சுவாமிகள் எழுந்தருளினர். மேள தாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத விநாயகர் தேர் நிலையிலிருந்து புறப்பட்டது.
திருத்தேரை விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் வடம் பிடித்து இழுத்து தொடக்கிவைத்தார். திருத்தேர் சன்னதி வீதியிலிருந்து புறப்பட்டு 4 மாட வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. விழாவில் கடலூர் மாவட்டம் மட்டுமன்றி, பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து, தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் குழந்தை தமிழரசன், தொழிலதிபர் அகர்சந்த் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், இந்து சமய அறநிலையத் துறையினர் பங்கேற்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான மாசிமகப் பெருவிழா வியாழக்கிழமை (மார்ச் 1) நடைபெறுகிறது. இந்த விழாவில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு மணிமுக்தாற்றில் தர்ப்பணம் செய்யும் நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை ( மார்ச் 2) தெப்பத் திருவிழாவும், சனிக்கிழமை (மார்ச் 3) சண்டிகேசுவரர் திரு விழாவும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.