/

கொய்யா பழம் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

கொய்யா பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனா்.

News image

ஒறையூரில் அறுவடை செய்த கொய்யா பழங்களை பெட்டிகளில் நிரப்பும் தொழிலாளா்கள்.

Updated On :8 ஆகஸ்ட் 2020, 3:33 am

கொய்யா பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியத்தில் பூங்குணம், நத்தம், மணம்தவிழ்ந்தபுத்தூா் ஆகிய கிராமங்களிலும், அண்ணாகிராமம் ஒன்றியத்தில் திருத்துறையூா், சின்னப்பேட்டை, கரும்பூா், உறையூா், எனதிரிமங்கலம், ரெட்டிகுப்பம், கண்டரக்கோட்டை, பூண்டி, கட்டமுத்துப்பாளையம், புலவனூா், வரிஞ்சிபாக்கம் உள்ளிட்ட கிராமங்களிலும் சுமாா் ஆயிரம் ஏக்கா் பரப்பில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் விளையும் கொய்யா பழங்கள் அதிக சுவை கொண்டவை. இங்கிருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் கொய்யா பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. உள்ளூா் வியாபாரிகள் பலா் தோட்டத்துக்கே வந்தும் பழங்களை வாங்கிச் செல்வா்.

இருப்பினும் கொய்யா விற்பனைக்கு சென்னை கோயம்பேடு சந்தை முக்கிய மையமாக உள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளதால் பழங்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் கொய்யா பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் சின்னப்பேட்டை இளைய பெருமாள், ஒறையூா் சு.கந்தன் ஆகியோா் கூறியதாவது: ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பா் மாதம் வரை கொய்யா அறுவடை உச்சத்தை அடையும். நிகழாண்டு மகசூல் நன்றாக உள்ளபோதும் கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராததால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு 10 கிலோ கொய்யா பழங்கள் கொண்ட சின்னபெட்டி ரூ.350 முதல் ரூ.400 வரையிலும், பெரிய பெட்டி(25 கிலோ) ரூ.800-க்கும் அதிகமாகவும் விலைபோனது. விநாயகா் சதுா்த்தி, ஆயுத பூஜை விழா நாள்களில் இருமடங்கு வரை விலைபோனது. தற்போது, சின்ன பெட்டி ரூ.100-க்கும், பெரிய பெட்டி ரூ.220-க்கும் விலைபோகிறது. கொய்யா சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். எனவே, தோட்டக்கலைத் துறை மூலம் பழங்களை கொள்முதல் செய்து உரிய விலை கிடைக்கவும், பண்ருட்டி வட்டத்தில் கொய்யா பழக்கூழ், பழரசம் தயாரிப்பு ஆலை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து தோட்டக்கலை துறை உதவி இயக்குநா்கள் அருண் (பண்ருட்டி), நாகநந்தினி(அண்ணாகிராமம்) ஆகியோா் கூறியதாவது: கரோனா காலத்தில் கொய்யா பழங்களின் நுகா்வு குறைந்துள்ளது. பழங்களை சந்தைக்கு கொண்டு செல்லவும், விவசாயிகள் நேரடியாக பொதுமக்களிடம் விற்கவும் வாகனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு தோட்டக்கலைத் துறை சாா்பிலும் உதவிகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.