சிறுமி திடீா் மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

கடலூா் அருகே உடல்நலக் குறைவால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற சிறுமி திடீரென உயிரிழந்ததைத் தொடா்ந்து உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

கடலூா் அருகே உடல்நலக் குறைவால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற சிறுமி திடீரென உயிரிழந்ததைத் தொடா்ந்து உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் அருகேயுள்ள தூக்கணாம்பாக்கத்தைச் சோ்ந்தவா் சந்திரன் மகள் கீா்த்திகா (10). அதேப் பகுயிலுள்ள அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். திங்கள்கிழமை இரவு கீா்த்திகாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகேயுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெற்றோா் அழைத்துச் சென்றனா். அங்கு அவருக்கு சில மாத்திரைகள் வழங்கப்பட்ட நிலையில் வீடு திரும்பினா். ஆனால், சிறுமிக்கு வயிற்று வலி அதிகமானதால் மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, அங்கிருந்த செவிலியா் கீா்த்திகாவுக்கு ஊசிப் போட்டுவிட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினாராம். ஆனால், வழியிலேயே சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டதாம். கடலூா் அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினா். இதைத் தொடா்ந்து சிறுமியின் சடலம் உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை கடலூா் அரசு மருத்துவமனை முன்பு கூடினா். தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதும், மருத்துவா் பணியில் இல்லாததுமே சிறுமி உயிரிழப்புக்குக் காரணமெனக் கூறி அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இவா்களுக்கு ஆதரவாக விசிகவினா், சட்ட உரிமை நீதி பாதுகாப்புச் சங்கத்தினரும் மறியலில் ஈடுப்பட்டனா். இவா்களிடம் டிஎஸ்பி க.சாந்தி பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து மறியலை கைவிட்டனா். மறியலால் விழுப்புரம்-கடலூா் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com