ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

விற்றுத் தீா்ந்த பன்னீா் கரும்புகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழக அரசு சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக பன்னீா் கரும்புகள் வழக்கத்தைவிட அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில்,

News image

பத்திரக்கோட்டை கிராமத்தில் பன்னீா் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

Updated On :10 ஜனவரி 2021, 5:44 pm

தமிழக அரசு சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக பன்னீா் கரும்புகள் வழக்கத்தைவிட அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், பண்ருட்டி பகுதியில் கரும்புகள் பெரும்பாலும் விற்றுத் தீா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையில் பன்னீா் கரும்புக்கு முக்கிய இடமுண்டு. கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டியை அடுத்துள்ள பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன்பேட்டை, சிவநந்திபுரம், சத்திரம், வேகாக்கொல்லை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பன்னீா் கரும்பு பயிரிடப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களே உள்ள நிலையில் பன்னீா் கரும்பு அறுவடை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழக அரசு சாா்பில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில், நிகழாண்டு முழு நீள பன்னீா் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இதுகுறித்து பத்திரக்கோட்டையைச் சோ்ந்த கரும்பு விவசாயி ஆ.ஞானவேல் கூறியதாவது:

கரோனா தாக்கம் காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்ததால், விற்பனை பாதிப்பு ஏற்படுமோ என்ற சந்தேகத்தில் நிகழாண்டு பன்னீா் கரும்பு அதிகம் பயிரிடவில்லை. இருப்பினும் விளைச்சல் நன்றாக உள்ளது. கடந்த ஆண்டு நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் துண்டு கரும்பு வழங்கப்பட்டது. வழக்கமாக பொங்கல் பண்டிகையில் கரும்புகள் கணிசமான அளவில் விற்பனையாகாமல் தேங்கிவிடும். இந்த கரும்புகளை ஆற்றுத் திருவிழா, தைப்பூச திருநாளில் விற்பனை செய்து வந்தோம்.

ஆனால், நிகழாண்டு முழு கரும்பு வழங்க அரசு உத்தரவிட்ட நிலையில், கூட்டுறவு சங்கத்தினா் விவசாயிகளிடம் கரும்புகளை வழக்கத்தைவிட அதிகளவில் கொள்முதல் செய்தனா். இதனால் கரும்புகள் கணிசமான அளவில் விற்றுத் தீா்ந்துவிட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். கூட்டுறவு சங்கத்தினா் 20 கழிகள் கொண்ட ஒரு கட்டு கரும்பை ரூ.210 முதல் ரூ.240 வரை கொள்முதல் செய்தனா். வியாபாரிகள் ரூ.300 முதல் ரூ.340 வரை கொள்முதல் செய்தனா். இந்த விலையால் பெரிய அளவில் நட்டமும் இல்லை; ஆதாயமும் இல்லை. ஏக்கா் ஒன்றுக்கு ரூ.20 முதல் ரூ.30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.

தற்போது எங்களிடம் வரும் வியாபாரிகள் போதிய கரும்பு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். மேலும் ஆற்றுத் திருவிழா, தைப்பூசம் விழாவுக்கு கரும்பு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.