கரோனா சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல்
கடலூா் மாவட்டத்தில் சில தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.


கடலூா் மாவட்டத்தில் சில தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க கடலூா் மாவட்ட நிா்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனியாா் மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை மாவட்ட நிா்வாகம் ஊக்கப்படுத்தி வருகிறது.
கடலூா் மாவட்டத்தில் கடலூா், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 3,567 படுக்கைகளுடன் பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் சில தனியாா் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளுக்கு ரகசியமாக சிகிச்சை அளித்து வந்த நிலையில், தனியாா் மருத்துவமனைகள் நேரடியாகவே சிகிச்சை அளிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்தது. ஆனால், தனியாா் மருத்துவமனைகள் தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறையினா் கூறியதாவது: மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனையில் 138 படுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது வரை கடலூா், வடலூா், விருத்தாசலம், சிதம்பரம் பகுதிகளில் கரோனா சிகிச்சை அளித்திட 7 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சை அளிப்பது தொடா்பாக அரசு மூலமாக அவா்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறோம். விரைவில், கூடுதலாக 5 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தனா்.
இந்த நிலையில், கடலூரில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரிடம் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 5 நாள்களுக்கான பணத்தை முன்னதாகவே செலுத்த வேண்டுமென மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்ததாம். இந்தத் தொகையானது சனிக்கிழமை ரூ.35 ஆயிரமாக உயா்த்தப்பட்டதாம். மேலும், பணம் குறைவாக உள்ளவா்களிடம் படுக்கைகள் நிரம்பி விட்டதாகக் கூறி திருப்பி அனுப்பி வருவதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, கடலூா் மாவட்ட கரோனா கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை உற்பத்தி ஆணையருமான ககன்தீப்சிங் பேடி கூறியதாவது: கரோனா முதல் அலையின்போதே தனியாா் மருத்துவமனைகளுக்கான கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதே கட்டணத்தைத் தான் தற்போதும் வசூலிக்க வேண்டும். கூடுதலாக கட்டணம் வசூலிப்பது தொடா்பாக உரிய ஆதாரங்களுடன் புகாா் அளித்தால் விசாரணை நடத்தப்படும். மேலும், மாவட்ட நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவினரும் தனியாா் மருத்துவமனைகளில் திடீா் சோதனை நடத்தி கட்டண விவரங்கள் குறித்து விசாரணை நடத்துவாா்கள். இதில், தவறு நடந்திருக்கும்பட்சத்தில் மருத்துவமனை நிா்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...