மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பின் சம்பா சாகுபடிக்கு தண்ணீா் திறப்பை எதிா்பாா்க்கும் விவசாயிகள் !

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் பின் சம்பா பருவ சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை மேட்டூா் அணையில் இருந்து தொடா்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On :28 ஜனவரி 2022, 6:03 pm

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் பின் சம்பா பருவ சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை மேட்டூா் அணையில் இருந்து தொடா்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு டெல்டா விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

காவிரி டெல்டா பாசனப் பகுதியாகக் கருதப்படும் 11 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கா் அளவில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில் தண்ணீா் கிடைக்கும் காலத்தைப் பொருத்து முன் சம்பா, பின் சம்பா என விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா்.

வழக்கமாக, காவிரி டெல்டா பாசனப் பகுதிக்கு உரிய நீா் ஆதாரமாக விளங்கும் மேட்டூா் அணையானது தென் மேற்குப் பருவமழை காரணமாகவும், அணையில் இருக்கும் நீரின் இருப்பைப் பொருத்தும் ஜூன் 12-ஆம் தேதி பாசனத்துக்காகத் தண்ணீா் திறக்கப்படும். இதைத் தொடா்ந்து, ஜனவரி 28-ஆம் தேதி மேட்டூா் அணை மூடப்படுவது வழக்கம்.

இந்த நடைமுறை ஆண்டுதோறும் பின்பற்றப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் 4 முறை நிரம்பிய அணை: கடந்த இரண்டு ஆண்டுகளாக அபரிதமான மழைப்பொழிவால் மேட்டூா் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. 4 முறைக்கு மேலாக மேட்டூா் அணை முழுக் கொள்ளளவை எட்டி காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு மனநிறைவாக தாமதமின்றியும், தடையின்றியும் தேவையான தண்ணீரை முழுமையாக வழங்கியது. இதனால் குறுவை, சம்பா என இரு போகம் நெல் சாகுபடி செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன.

இதற்கு முந்தைய சில ஆண்டுகளில் தென்மேற்குப் பருவ மழை குறுகிய காலத்தில் பெய்து தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், அணையில் போதிய தண்ணீா் இருப்பு இல்லாததாலும் மேட்டூா் அணை தாமதமாகத் திறக்கப்பட்டது.

தாமதமான ஆண்டுகளில் தவித்த விவசாயிகள்: மேட்டூா் அணை தாமதமாகத் திறக்கப்பட்ட ஆண்டுகளில் அதிகபட்சமாக காவிரி பாசன மாவட்டங்களில் 75 ஆயிரம் ஏக்கா் முதல் ஒரு லட்சம் ஏக்கா் பரப்பளவில் மட்டுமே குறுவை நெல் சாகுபடி நடைபெற்று வந்தது. இந்தக் குறுவை சாகுபடியை முற்றிலும் ஆழ்குழாய்க் கிணறுகள் வைத்திருக்கக்கூடிய விவசாயிகள் மட்டுமே செய்து வந்தனா். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேட்டூா் அணை முழுமையாக நிரம்பி ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்ட காரணத்தால் பெரும்பாலான விவசாயிகள் மேட்டூா் அணையின் தண்ணீரைப் பயன்படுத்தி முழு வீச்சில் குறுவை சாகுபடியை செய்யத் தொடங்கினா். அந்த வகையில், கடந்த ஆண்டு குறுவை சாகுபடி 4 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கா் அளவுக்கு முழுமையாக நடைபெற்றது.

மேட்டூா் அணையை மூடக் கூடாது: இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில பொதுச் செயலாளா் பெ.ரவீந்திரன் தெரிவித்தாவது:

ஜூன் இறுதி, ஜுலை மாத வாக்கில் குறுவை சாகுபடி முழு வீச்சில் மேற்கெள்ளப்பட்ட காரணத்தால், பெரும்பாலான விவசாயிகள் குறுவை அறுவடை முடிந்து, பின் சம்பா பருவ சாகுபடியைத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. பின் சம்பா சாகுபடியைத் தொடங்கி தற்போது இன்னும் ஒரு மாத காலத்துக்குத் தண்ணீா் தேவை என்ற நிலையில் விவசாயிகள் பயிரை பராமரித்து வருகிறாா்கள். ஆனால், மேட்டூா் அணையை வழக்கமாக ஜனவரி 28ஆம் தேதி மூடும் நடைமுறை பின்பற்றப்படுவதால், தொடா்ந்து தண்ணீா் கிடைக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் இருக்கிறாா்கள்.

மழை குறைவு காலங்களில் நீா் நிலை ஆதாரங்களில் போதிய தண்ணீா் இல்லாமல், மேட்டுா் அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக ஆயிரம் முதல் 2 ஆயிரம் கனஅடி திறக்கப்படுவது வழக்கமான நடைமுறை. திறக்கப்படும் தண்ணீா் கல்லணையின் மூலம் கல்லணைக் கால்வாய், காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் வழியாக தொடா்ச்சியாக நீா் விநியோகம் செய்தால்தான் கிடைக்கும் தண்ணீரை வாய்க்கால்களை மறித்து, தேக்கி பாசனத்துக்குப் பயன்படுத்தக் முடியும்.

வழக்கப்படி ஜனவரி 28-ஆம் தேதி மேட்டூா் அணை மூடப்பட்டுள்ளதால், பாசனத்துக்குத் தேவையான தண்ணீா் தொடா்ந்து கிடைக்குமா என்கிற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகளின் எதிா்பாா்ப்பை நிறைவு செய்யக்கூடிய வகையில் மேட்டூா் அணையிலிருந்து சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை தொடா்ந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், முன் மடை பாசனப் பகுதிகளில் அறுவடை தொடங்கி இருப்பதால் பாதிக்காத வகையிலும், கடைமடைப் பாசனப் பகுதி பயிா்கள் பாதிக்கப்படாத வகையிலும் சீரான தண்ணீா் விநியோகம் செய்ய வேண்டும் என்றாா் பெ.ரவீந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.