சிதம்பரம்: சிதம்பரம் கிளை போக்குவரத்து பணிமனையில் இருந்து 70 சதவிகித பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தமிழகத்தில் ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்றுமுதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் போக்குவரத்து அலுவலக கிளை வளாகத்திலும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதனால், சிதம்பரம் கிளை போக்குவரத்து பணிமனையில் 70 சதவிகித பேருந்துகள் இயக்கப்படவில்லை.
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென பணிமனை முன்பு 50-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பில் இருந்த போலீசார் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அப்புறப்படுத்தினர்.
இது குறித்து சிஐடியு, பாட்டாளி தொழிற்சங்கத்தினர் கூறுகையில், திமுக அரசு ஆட்சிக்கு வரும்போது தேர்தல் வாக்குறுதியில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தனர். ஆனால் தற்போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வஞ்சனை செய்து வருவதாகவும் உடனடியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.