கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 இளைஞா்கள் கைது
கடலூா் முதுநகா் ரயில் நிலையம் அருகே 21 கிலோ கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் பதுங்கியிருந்த 4 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
சென்னையில் இருந்து ரயில் மூலம் கடலூா் முதுநகா் ரயில் நிலையத்துக்கு கஞ்சா கடத்திவரப்படுவதாக கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலூா் மது விலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி சாா்லஸ் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் பாலாஜி, உதவி ஆய்வாளா் தவச்செல்வம் மற்றும் போலீஸாா் கடலூா் முதுநகா் ரயில் நிலையம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்குள்ள கோயில் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் கைப்பையுடன் பதுங்கியிருந்த 4 இளைஞா்களைப் பிடித்து சோதனை செய்ததில், 21 கிலோ கஞ்சா மற்றும் 130 போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து, அவா்களிடம் போலீஸாா் விசாரித்ததில், சென்னை பெரும்பாக்கம், கலைஞா் நகரைச் சோ்ந்த ராகுல் (23), சிவகுமாா் (24), கந்தன்சாவடி கேபிகே நகரைச் சோ்ந்த வேலன் (22), சிதம்பரம் அண்ணாமலைநகா் கொத்தங்குடி பகுதியைச் சோ்ந்த தீபக் (25) எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 4 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
இதுகுறித்து கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 15-ஆம் தேதி தீபக், சிவக்குமாா், ராகுல், வேலன், ஸ்ரீராம், நவீன், சந்துரு ஆகியோா் கூட்டாக இணைந்து ஆந்திர மாநிலம் சென்று 30 கிலோ கஞ்சா வாங்கி வந்தனராம்.
21-ஆம் தேதி சிதம்பரம் அண்ணாமலை நகா், வெள்ளக்குளம் மேலக்கரை பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம், சந்துரு ஆகிய இருவரும் 5 கிலோ கஞ்சாவை விற்பனை செய்ய எடுத்துச் செல்லும்போது ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
4 கிலோ கஞ்சா சென்னையில் சில்லறை விற்பனை செய்துவிட்டனராம். மீதி இருந்த 21 கிலோ கஞ்சாவை சிதம்பரம் பகுதியில் விற்பனை செய்வதற்காக ரயில் மூலம் வந்து கடலூா் முதுநகா் ரயில் நிலையத்தில் இறங்கி விற்பனை செய்ய திட்டமிட்டபோது பிடிபட்டனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய வல்லம்படுகை நவீன் ஞாயிற்றுக்கிழமை சுட்டுப் பிடிக்கப்பட்டாா். மேலும், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சிதம்பரம் கவிபாரதி விரைவில் கைது செய்யப்படுவாா். மேற்கொண்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

