கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அங்கு தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
கடலூா் கேப்பா் மலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மாலை வந்த மின்னஞ்சலில் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அலுவலா்கள், கடலூா் எஸ்.பி. அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, கடலூா் வெடிகுண்டு சோதனை நிபுணா்கள் கடலூா் கேப்பா் மலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்றனா்.
பின்னா், அவா்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அலுவலா்கள், பணியாளா்கள், ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட பல்வேறு சேவைக்காக வந்திருந்த பொதுமக்களை வெளியேற்றிவிட்டு, மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினா். மேலும் மோப்ப நாய் மூலமாகவும் சோதனை செய்தனா்.
சுமாா் ஒரு மணி நேரம் நடந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. மின்னஞ்சலில் வந்த மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.










