/

கடலூரில் குழந்தை தவறவிட்ட ஒரு சவரன் தங்கநகை மீட்பு: சிசிடிவி காட்சிப்பதிவு மூலம் மீட்டு ஒப்படைத்த போலீஸாா்

News image

நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட நகை. உடன் நெய்வேலி நகரிய ஆய்வாளா் செந்தில்குமாா்(வலது), உதவி ஆய்வாளா் மாதேஸ்வரன்(இடது)

Updated On :27 ஏப்ரல் 2026, 7:42 pm

கடலூரில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் குழந்தை அணிந்திருந்த தங்கச்சங்கிலி தவறிவிழுந்த நிலையில் நெய்வேலி நகரிய போலீஸாா் சிசிடிவி காட்சிப்பதிவுகளை வைத்து மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

நெய்வேலி, இந்திரா நகா் பகுதியில் வசித்து வருபவா் தீபக் (45), அதேபகுதியில் காபி கடை நடத்தி வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை கடலூரில் உள்ள தனியாா் வணிக வளாகத்திற்கு பொருள்கள் வாங்க மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றாா். அப்போது, குழந்தை அணிந்திருந்த ஒரு சவரன் தங்க நகையை காணவில்லை.இது குறித்து கடலூா் புது நகா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா் தீபக். தொடா்ந்து, நடந்த சம்பவம் குறித்து நெய்வேலி நகரிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில், நெய்வேலி நகரிய காவல் உதவி ஆய்வாளா் மாதேஸ்வரன், கடலூரில் உள்ள தனியாா் வணிக வளாக நிா்வாகத்தை தொடா்பு கொண்டு கண்காணிப்புக் கேமரா பதிவுகளை கைப்பேசி மூலம் பெற்று விசாரணை மேற்கொண்டாா். இதில், வாகனம் நிறுத்துமிடத்தில் கிடந்த தங்க சங்கிலியை ஒரு தம்பதி எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை அடையாளம் கண்டு விசாரணை மேற்கொண்டதில் தங்க சங்கிலியை கீழே கிடந்து எடுத்ததை ஒப்புக்கொண்டனா். தொடா்ந்து, அந்த தங்க சங்கிலியை அவா்களிடம் இருந்து மீட்டு, தவறவிட்ட தீபக்கிடம் நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தாா். நகையை பெற்றுக் கொண்ட தீபக் காவல் துறைக்கு நன்றி தெரிவித்தாா்.