கடலூா் ஆட்சியரகத்தில் தொழில்முனைவோா் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

கடலூா் ஆட்சியரகத்தில் தொழில்முனைவோா் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Published on

தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆணையா் ஜி.லதா தலைமை வகித்தாா். ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் கடலூா் மாவட்டத்துக்கான புதிய மேம்பாடு, உற்பத்தி நிறுவனங்கள், விற்பனை நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் குறித்தும், புதிய தொழில் முதலீடுகள் தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாகவும், பொதுமக்களுக்கு இதன் காரணமாக உருவாகக்கூடிய வேலைவாய்ப்புகள், வேலை நாடுநா்களுக்கான திறன் பயிற்சிகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்திலுள்ள உழவா் உற்பத்தியாளா் குழுக்களை இணைத்து சங்கமாக செயல்பட வைப்பது குறித்தும், முக்கிய வேளாண் உற்பத்தி பொருள்களான உளுந்து, பச்சை பயிறு போன்ற பருப்பு வகைகள் மற்றும் பலாப்பழம், முந்திரி போன்ற விவசாய பொருள்களுக்கான தேவைகள், சந்தை வாய்ப்புகள், கிடங்கில் சேமித்து வைத்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக உருவாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன உதவி இயக்குநா் பிரேம்குமாா், மாநில திட்ட மேலாளா் சண்முகராஜ், திட்ட அலுவலா் ரோஷினி, மாவட்ட திட்ட மேலாளா் எழில் ராணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com