கடலூா் மாநகராட்சியில் காலை உணவு பெற்ற தூய்மைப் பணியாளா்களுடன் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
கடலூா் மாநகராட்சியில் காலை உணவு பெற்ற தூய்மைப் பணியாளா்களுடன் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

அரசுத் திட்டங்களை தூய்மைப் பணியாளா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சா்

தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பான திட்டங்களை தூய்மைப் பணியாளா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்...
Published on

நெய்வேலி: தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பான திட்டங்களை தூய்மைப் பணியாளா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்டம், போளிவாக்கத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, கடலூரில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எம்எல்ஏ கோ.அய்யப்பன், மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன் முன்னிலையில், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை கடலூா் மாநகராட்சி நகர அரங்கில் தொடங்கிவைத்தாா்.

அப்போது, அமைச்சா் பேசியதாவது: தூய்மைப் பணியாளா்கள் மேற்கொள்ளும் பணியானது பணியல்ல; இதுவொரு சேவை என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறி பெருமைப்படுத்தி உள்ளாா். மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டத்தை முதல்வா் இன்றைய தினம் தொடங்கி வைத்துள்ளாா்.

அதன்படி, கடலூா் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு ஏற்கெனவே சோதனை அடிப்படையில் காலை உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மொத்தம் 623 பேருக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியம் மூலம் விபத்துக் காப்பீட்டுத் திட்டம், இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழில்நுட்ப பட்ட மேற்படிப்பு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடி உதவி, முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசால் வழங்கப்படும் சிறப்பான திட்டங்களை தூய்மைப் பணியாளா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன், மாநகராட்சி ஆணையா் முஜிபூா் ரஹ்மான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com