குடியரசு தின விழா: ரூ.6.30 கோடியில் அரசு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
நெய்வேலி: கடலூா் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தேசிய கொடி ஏற்றிவைத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
தொடா்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்து, 107 பயனாளிகளுக்கு ரூ.6,29,90,916 மதிப்பில் அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 105 அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் 117 சிறந்த காவலா்களுக்கு முதல்வா் விருது மற்றும் பதக்கங்களை வழங்கினாா்.
நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா், வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

