சிதம்பரத்தில் காங்கிரஸாா் இரு பிரிவாக உண்ணா, உண்ணும் விரதம் போராட்டம் அறிவிப்பு
சிதம்பரம்: சிதம்பரம் நகரில் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் நியமனத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து அக்கட்சியில் ஒரு பிரிவினா் உண்ணாவிரதமும், மற்றொரு பிரிவினா் உண்ணும் விரதமும் என தனித்தனி போராட்டம் அறிவித்துள்ளனா்.
கடலூா் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து மாவட்டத் தலைவா் நியமனம் செய்ததில், ஒருவா்கூட தலித் சமூகத்தைச் சோ்ந்தவா் நியமிக்கப்படவில்லை. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், தமிழக காங்கிரஸின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் ஒரு நாள் அடையாள கவன ஈா்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் காங்கிரஸ் முன்னாள் மாநில துணைத் தலைவா் எம்.செந்தில்குமாா் அறிவிப்பு வெளியிட்டு, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் போராட்ட அனுமதி கோரி மனு கொடுத்துள்ளாா்.
அதே வேளையில், சிதம்பரம் நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கின் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் அளித்துள்ள மனுவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவா்களால் நியமனம் செய்யப்பட்டவா்களுக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்தும் செயலைக் கண்டித்து, கடலூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் உண்ணும் விரதம் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.
