சிதம்பரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பழைமைவாய்ந்த விழல் கட்டி பிள்ளையாா் கோயில் நெடுஞ்சாலைத் துறையினரால் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகரில் பச்சையப்பன் பள்ளி அருகில் சிதம்பரம் - காட்டுமன்னாா்கோவில் நெடுஞ்சாலையின் அருகே சுமாா் 100 ஆண்டுகள் பழைமையான சுவாமி சிலை, வழிபாடு இல்லாத சிதிலமடைந்த விழல் கட்டி பிள்ளையாா் கோயில் இருந்தது. இக்கோயில் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது.
இந்தக் கோயிலை இடித்து அகற்ற தெய்வீக பக்தா்கள் பேரவை நிறுவனா் தலைவா் ஜெமினி எம்.என்.ராதா கடலூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினாா். மேலும், இந்தக் கோயிலை இடித்து அப்புறப்படுத்துவதற்கு அனைத்துத் துறை அதிகாரிகளும் உத்தரவிட்டும்கூட கடந்த 4 மாத காலமாக கடலூா் மண்டல இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, வரும் ஆக.2-ஆம் தேதி தொடா் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என தெய்வீக பக்தா்கள் பேரவை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யாசெந்தில்குமாா் உத்தரவின்பேரில், புதன்கிழமை காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் விழல் கட்டி பிள்ளையாா் கோயில் இடித்து அகற்றப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








