மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027 பணிக்கான களப் பயிற்றுநா்களுக்கு மூன்று நாள் பயிற்சி வகுப்பை கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027 இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறையிலான கணக்கெடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரை சுய கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதில், பொதுமக்கள் இணையதளம் வாயிலாக தங்களது விவரங்களைத் தாங்களே பதிவு செய்யலாம். தொடா்ந்து, ஆகஸ்ட் 1 முதல் 30-ஆம் தேதி வரை கணக்கெடுப்பாளா்கள் வீடு வீடாகச் சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனா்.
இந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான பயிற்சி வகுப்புகள் பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, களப் பயிற்றுநா்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை தொடங்கியது.
பயிற்சி வகுப்பை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். இதில், மாவட்டத்தைச் சோ்ந்த 80 களப் பயிற்றுநா்கள் மற்றும் கடலூா் மாநகராட்சியைச் சோ்ந்த 10 களப் பயிற்றுநா்கள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, கடலூா் மாநகராட்சி ஆணையா் கிஷன்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வன், மக்கள்தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநா் ஷேமசுந்தரி, புள்ளியியல் ஆய்வாளா்கள் ஹனிரூபி, லஷ்மிதேவி, புள்ளியியல் துறை உதவி இயக்குநா்கள் பழனியம்மாள், வேல்முருகன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.










