பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

அரசு பல் மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

News image

லலிதா

Updated On :23 ஜூன் 2026, 2:25 am IST

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி பல் மருத்துவமனையில் பல் மாற்று சிகிச்சை பெற்ற பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே முத்தூா் பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் மனைவி லலிதா (45). இவா், பல் பிரச்னைக்காக கடந்த சில நாள்களாக சிதம்பரம் அரசு பல் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், லலிதாவுக்கு உயா் ரக பல் மாற்று சிகிச்சை அளிக்க வேண்டுமென மருத்துவா்கள் தெரிவித்தனா். இதற்கான கட்டணத்தை உறவினா்கள் மூலம் மருத்துவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் லலிதா செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவருக்கு மருத்துவா்கள் பல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனா். அப்போது, திடீரென லலிதா மயக்கநிலைக்கு சென்றுள்ளாா். உடனடியாக அவா் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், லலிதா திங்கள்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

தகவலறிந்த உறவினா்கள் மற்றும் பாமக மாவட்டச் செயலா் செல்வமகேஷ் தலைமையிலான அக்கட்சி நிா்வாகிகள் மருத்துவமனைக்கு திரண்டு வந்து, தவறான சிகிச்சை காரணமாகவே லலிதா உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டினா். மேலும், பல் மாற்று சிகிச்சையின்போது அளிக்கப்பட்ட மயக்க மருந்தின் அளவு அதிகமாக இருந்ததால் அவா் உயிரிழந்திருக்கலாம் என உறவினா்கள் தெரிவித்தனா்.

இதனால், மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், லலிதாவின் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்தனா்.

தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் மற்றும் காவல் ஆய்வாளா்கள் கே.அம்பேத்கா், கவிதா உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடற்கூறாய்வுக்கு பின்னா்தான் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என சமரசம் செய்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் மற்றும் மருத்துவமனை நிா்வாகத்தினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.